ஒமைக்ரான் வைரஸ் தோற்றத்திற்கு எச்ஐவி காரணமா? பகீர் தகவல்!


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் ஆல்பா, பீட்டா, டெல்டா வரிசையில் தற்போது ஒமைக்ரான் எனப் பல உருமாறிய வைரஸ்களைத் தோற்றுவித்திருக்கிறது. இந்நிலையில் வலுவான ஒமைக்ரான் வைரஸ்க்கு எச்ஐவியும் ஒரு காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து இருப்பது பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் உடலில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அந்த வைரஸ் மேலும் அதிக உருமாற்றம் அடைந்திருக்கலாம் எனும் கருத்தை தென்ஆப்பிரிக்கா ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எச்ஐவி வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
இப்படி குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களிடம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும்போது அந்த வைரஸ்க்கு எதிராக அவர்களது ஆன்டிபாடிகள் போராடும். ஆனாலும் கொரோனா போன்ற புதிய வைரஸ்களை எதிர்கொள்ள முடியாமல் அவர்களது உடலில் நீண்டகாலம் கொரோனா வைரஸ் தங்கிவிடுகிறது. இப்படி நீண்டகாலம் கொரேனா வைரஸ் தங்கியிருக்கும் நபர்களிடம் இருந்தே ஒமைக்ரான் போன்ற பலமுறை உருமாறிய கொரோனா வைரஸ்கள் தோற்றம் பெற்றிருக்க முடியும் எனும் கருத்தை தற்போது தென்ஆப்பிரிக்க ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.
இதற்கு சான்றாக லெசெல்ஸ் எனும் ஆய்வாளர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 36 வயதுடைய பெண்ணிடம் பலமுறை உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் வகையை கண்டறிந்தார் என்றும் அது “பீட்டா“ வகையைச் சேர்ந்தது என்றும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையடுத்து தென்ஆப்பிரிக்காவில் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனம் விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பென்னி மூர், நோய்த்தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்வோர் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள் ஆகியோரால் கொரோனா வைரஸின் புதிய உருமாற்றங்கள் சாத்தியமாகிறது எனும் கருத்தை வலியுறுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தென்ஆப்பிரிக்காவில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகளவில் உள்ளனர். அதுவும் காங்கோவில் வாழும் 3இல் 2 பகுதி மக்களுக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இப்படி பாதிக்கப்பட்ட 80% மக்கள் 50 வயதிற்கும் குறைவாகவே உள்ளனர். இந்நிலையில் எச்ஐவி பாதித்த மக்களுக்கு முறையான சிகிச்சையும் கிடைப்பதில்லை. இதனால் அவர்களை கொரோனா வைரஸ் தாக்கும்போது அதிக உயிரிழப்பை ஏற்படுத்துகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
மேலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர், எச்ஐவி பாதித்த நபர் போன்றோர்களை கொரோனா வைரஸ் தாக்கும்போது அவர்களது உடலில் நீண்டநாட்கள் கொரோனா தங்கிவிடுகிறது. இப்படி தங்கிய நபரிடம் இருந்தே பலமுறை உருமாற்றம் கொண்ட ஒமைக்ரான் வைரஸ் தோற்றம் பெற்றிருக்கும். எனவே இதுகுறித்த மேலும் அதிக ஆய்வுகள் தேவை என்றும் தெரிவித்து உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments