விழா மேடையில் இருந்த சரஸ்வதி படத்தால் இலக்கிய விருதையே உதறித் தள்ளிய கவிஞர்!
வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற இருந்த மராட்டிய மூத்த கவிஞர் ஒருவர் விழா மேடையில் சரஸ்வதி படம் வைக்கப்பட்டு இருந்ததால் விருதையே வேண்டாம் என உதறி இருக்கிறார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அந்தக் கவிஞர் நான் பொதுவாக இலக்கிய நிகழ்ச்சிகளில் மதம் இருப்பதை அங்கீகரிக்கவில்லை. அதனால் விருதை மறத்து விட்டேன் என விளக்கம் அளித்து இருக்கிறார்.
மராத்திய மொழியின் மூத்த கவிஞரான யஷ்வந்த் மனோகர் இப்படி செய்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. விதர்பா சாகித்ய சங்கம் (வி.எஸ்.எஸ்) எனும் அமைப்பு இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவித்து இருந்தது. கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்வின் போது விழா மேடையில் சரஸ்வதி சிலை வைத்து அதற்கு மாலை அணிவித்து இருந்தனர். இந்தக் காட்சிகளைப் பார்த்த கவிஞர் விழா மேடைக்கே போகாமல் தவிர்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் யஷ்வந்த் மனோகர் தனக்கு வரவேண்டிய மிக உயர்ந்த இலக்கிய விருதை மறுத்து இருக்கிறார்.
இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், பொதுவாக இலக்கிய நிகழ்ச்சிகளில் மதம் இருப்பதை நான் அங்கீகரிப்பதில்லை. மேடையில் இருந்த அந்த கடவுளின் உருவப்படம் பெண்கள் மற்றும் ஷூத்ராக்களை கல்வி மற்றும் அறிவிலிருந்து தடை செய்த சுரண்டலின் அடையாளம் என நினைக்கிறேன். எனவே எனது மதிப்புகளை மறுப்பதன் மூலம் என்னால் அந்த விருதை ஏற்றுகொள்ள முடியவில்லை.
எனவே நான் அதை பணிவுடன் மறுத்துவிட்டேன். சரஸ்வதி தேவிக்கு பதிலாக சாவித்ரிபாய் பூலேவின் புகைப்படத்தையும் இலக்கிய அல்லது பொது நிகழ்வுகளில் அரசியலமைப்பின் நகல்களையும் வைத்திருப்பதற்கான சாத்தியத்தை பரிசீலிக்குமாறு அனைத்து கலைஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கு கோரிக்கை வைக்கிறேன் மராட்டி மூத்த கவிஞரான யஷ்வந்த் மனோகர் தெரிவித்து உள்ளார்.