close
Choose your channels

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வரலாறு, சிறப்புகள் மற்றும் பலன்கள்!

Tuesday, January 28, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்காக டாக்டர் தீபா அருளாளன் அளித்த சிறப்பு பேட்டியில், முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தின் பெருமைகளை விரிவாக விளக்கினார்.

திருப்பரங்குன்றத்தின் வரலாறு:

திருப்பரங்குன்றம், மதுரைக்கு தென்மேற்கே சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. "பரம்" என்றால் பரமேஸ்வரன், "குன்றம்" என்றால் மலை. பரமேஸ்வரனே குன்றின் வடிவில் இங்கே காட்சி தருவதால் தான் இதற்கு திருப்பரங்குன்றம் என்று பெயர் வந்தது. அண்ணாமலையான் அடிமுடி காணா ஜோதி ரூபமாய் நின்றது திருவண்ணாமலையில், அதே அண்ணாமலையான் குன்றின் ரூபமாய் நிக்கிறது திருப்பரங்குன்றத்தில் என்று கூறுவார்கள். முருகப்பெருமான் சிவபிரானை பரங்கிரிநாதராக வழிபட்ட ஸ்தலம் இது. திருஞானசம்பந்தர் இந்த ஸ்தலத்தைப் பற்றி மிகவும் அழகாக பாடியுள்ளார். யார் ஒருவர் திருப்பரங்குன்றத்தை தினந்தோறும் வலம் வந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு உலகத்தில் உள்ள அனைத்து இன்பங்களும் கிடைக்கும். எந்த துன்பமும் இல்லாத வாழ்க்கை என்பது கனவு அல்ல, அது நனவாகும் என்கிறார் திருஞானசம்பந்தர். பூலோகத்தில் வாழும்போதே எல்லா சுகபோகங்களையும் பெற்று, பூலோகம் முடிந்த பிறகு எம வாதனை அடையாமல் நேராக சிவ சாயுச்சியம் போவார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

திருப்பரங்குன்றத்தின் சிறப்புகள்:

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் திருக்கல்யாணம் நடந்த இடம். முருகப்பெருமான், தேவேந்திரனின் மகளான தேவசேனையை இங்குதான் மணந்தார். ஆகவே, திருமண தோஷத்திற்கு இது சிறந்த ஸ்தலமாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் திருமண தோஷம், மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். சில ஜாதகங்களில் திருமணமே நடக்காது, அப்படியே நடந்தாலும் விவாகரத்து ஏற்படும் என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட ஜாதகம் உள்ளவர்கள் திருப்பரங்குன்றம் முருகர் கோவிலில் திருமணம் செய்தால், அவர்கள் நிலைத்து வாழ்வார்கள் என்று நம்பப்படுகிறது. முருகனுக்கு திருமணம் நடந்த இந்த இடத்தில் எந்த திருமணம் நடந்தாலும் அது ஸ்திரமாக இருக்கும் என்பது நம்பிக்கை. பிரம்மன் விவாக காரியங்களை நடத்த, சூரியனும் சந்திரனும் நவரத்தின தீபங்களை ஏந்தி நிற்க, அகிலலோக ஐயனாகிய பரமேஸ்வரரும், அகிலோலோக அன்னையாகிய அம்பிகையும் பரமானந்தம் எய்த, பவளக்கொடியான தேவசேனையை தேவேந்திரன் முருகனுக்கு கொடுக்க, எம் சுவாமி எம்பெருமான் முருகேசன், கதிரேசன், குமரேசன் தேவசேனையை கரம் பிடித்த திருத்தலம் இது என்று கவிஞர்கள் பாடியுள்ளனர். இங்கு முருகர் திருமண கோலத்தில் காட்சி கொடுக்கிறார்.

நக்கீரரும் திருமுருகாற்றுப்படையும்:

திருப்பரங்குன்றத்தின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். நக்கீரர் இங்கு தவம் புரிந்தார். திருவிளையாடலில் தருமி எழுதிய பாடலை நக்கீரர் ஆராய்ந்து, சிவபெருமானே நேரில் வந்தாலும் குற்றம் குற்றமே என்று வாதிட்டார். பின்னர் பொற்றாமரை குளத்தில் விழுந்து மனம் திருந்தி தவம் புரிந்த இடம் இது. ஞானம் வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்தால் புத்திசாலித்தனம் பெறுவார்கள். நக்கீரர் தவம் புரியும்போது, ஒரு மீன் பாதி உடம்பு மீனாகவும், பாதி உடம்பு பறவையாகவும் இருந்ததைக் கண்டார். அப்போது ஒரு பூதம் அவரைத் தூக்கிச் சென்று சிறையில் அடைத்தது. அங்கு 999 முனிவர்களும் ரிஷிகளும் இருந்தனர். நக்கீரர் திருமுருகாற்றுப்படையை பாட, முருகன் காட்சி கொடுத்து பூதத்தை சம்ஹாரம் செய்து அனைவரையும் விடுவித்தார். பூதம் தன்னை தீண்டியதால் பாவம் நீங்க கங்கையில் குளிக்க வேண்டும் என்று நக்கீரர் முருகனிடம் வேண்டினார். முருகன் தன் வேலை மலையில் ஊன்றி கங்கையை வரவழைத்தார். காசியில் கங்கையில் குளித்தால் என்ன புண்ணியமோ, அதே புண்ணியம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கங்கையில் குளித்தாலும் கிடைக்கும். திருமுருகாற்றுப்படை பாராயணம் செய்தால் முடியாத காரியமும் நடக்கும் என்பது நக்கீரர் வாக்கு.

நவ வீரர்களும் வெள்ளை மயிலும்:

இங்கு நவ வீரர்கள் சன்னதி உள்ளது. பார்வதி தேவியின் சலங்கையில் இருந்து சிதறிய நவரத்தின பரல்கள் ஒன்பது கன்னிகைகளாக மாறினர். அவர்கள் ஈசனைப் பார்த்து காதல் கொண்டு கர்ப்பம் தரித்தனர். பார்வதி தேவி கோபம் கொண்டு அவர்களுக்கு சாபம் கொடுத்தாள். பின்னர் பரமேஸ்வரன் அவர்களை சமாதானப்படுத்தி, அவர்கள் குழந்தைகளுக்கு துணையாக ஒன்பது புத்திரர்கள் பிறப்பார்கள் என்று கூறினார். அந்த ஒன்பது புத்திரர்கள் தான் நவ வீரர்கள். அவர்களில் வீரபாகு முருகனின் நிழலாக எப்போதும் கூடவே இருப்பார். தைரியம் இல்லாத குழந்தைகளுக்கு நவ வீரர்களை வழிபட்டால் தைரியம் கிடைக்கும். திருப்பரங்குன்றத்தில் வெள்ளை மயிலை பார்க்கலாம். தேவர்கள் வெள்ளை மயில் உருவில் முருகனை வழிபடுவதாக ஐதீகம். வெள்ளை மயிலை தரிசனம் செய்வது நல்லது.

வழிபாட்டு முறைகளும் பலன்களும்:

திருவண்ணாமலை கிரிவலம் போல இங்கும் கிரிவலம் செய்வது சிறப்பு. பௌர்ணமி, அமாவாசை, மாதப்பிறப்பு, ஏகாதசி, கிருத்திகை, சஷ்டி போன்ற நாட்களில் இங்கு வழிபடுவது பன்மடங்கு பலன் தரும். முருகனுக்கு அபிஷேகம் என்றால் பால் மிகவும் பிரியமானது. திருப்பரங்குன்றத்தில் பாலாபிஷேகம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.

டாக்டர் தீபா அருளாளன் அவர்களின் இந்த விரிவான பேட்டியை ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் முழுமையாகக் காணலாம்.Aanmeegaglitz Whatsapp Channel

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos