பிசிசிஐ தலைவர் கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி நெஞ்சு வலி காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளளார். முன்னதாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நலம்பெற்று வீடு திரும்பிய அவர் தற்போது 20 நாட்கள் கழித்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
கடந்த 2 ஆம் தேதி காலை, உடற்பயிற்சி செய்யும்போது நெஞ்சு வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டதை அடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள வுட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதாகக் கூறி அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சை அளித்தனர். பின்னர் உடல்நலம் தேறிய அவர் கடந்த 7 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் நல்ல உடல் நிலையுடன் இருப்பதாக ரசிர்களுக்கு கூறிய அவர் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி, இந்திய அணியின் ஆஸ்திரேலிய வெற்றிக் குறித்து டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். சில வீரர்களுக்கு பரிசு தொகையையும் உடனுக்குடனே பிசிசிஐ டிவிட்டர் பதிவில் வெளியிட்டு இருந்தார். தற்போது இங்கிலாந்துக்கு இடையிலான போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையில் கங்குலி நல்ல உடல் நிலையுடன் செயல்பட்டு வருகிறார் என்றே பலரும் கருதிக் கொண்டு இருந்தனர்.
இதற்கு மாறாக நேற்று இரவு கங்குலிக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் இன்று மதியமும் அதேபோன்ற வலியுடன் அவர் அவதிப்பட்ட நிலையில் கொல்கத்தாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்துக்கு இடையிலான போட்டி துவங்க உள்ள நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அவர் மிக விரைவாக உடல்நலம் பெற்று மீண்டு வரவேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.