விஜயகாந்துக்கு கொரோனா எப்படி வந்தது? பிரேமலதா பேட்டி!
கேப்டன் விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு கொரோனா எப்படி ஏற்பட்டது என்பதே தெரியவில்லை என அவருடைய மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா கூறியுள்ளார்.
சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ‘விஜயகாந்துக்கு இலேசான கொரோனா அறிகுறிகள் மட்டுமே இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விஜயகாந்த் தற்போது பூரண உடல் நலத்துடன் நலமுடன் இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
மேலும் விஜயகாந்துக்கு ஒரு சில நாட்களிலேயே கொரோனா சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார். விஜயகாந்த் உடல் நலம் குறித்து தொலைபேசியில் தொடர்புகொண்டு ரஜினிகாந்த் விசாரித்தார் என்றும் அவருக்கு தனது நன்றி என்றும் அவர் கூறினார்.
மேலும் விஜயகாந்துக்கு கொரோனா எப்படி ஏற்பட்டது என தெரியவில்லை என்று கூறிய பிரேமலதா, விஜயகாந்த் அடுத்த ஓரிரு நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்றும் கூறினார். மேலும் கேப்டன் விஜயகாந்த் அடுத்த வாரம் முதல் ஆன்லைனில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் பிரேமலதா கூறியுள்ளார்.