முதல் 'ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர்' படமாக திரையரங்க அனுபவம் கொடுக்கும் மர்மர் !
ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ள படம் ' மர்மர் '. எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட வீடியோ காட்சிகள் ஆதாரம் அடிப்படையான கதைக்களம். படம் துவக்கம் முதல் இறுதி வரை வீடியோ கேமரா விஷுவலிலேயே செல்கிறது. நான்கு யுடியூப் சேனல் இளைஞர்கள் காத்தூர் கிராமத்தின் அமானுஷ்ய கதையை கேட்டு அதை வீடியோ டாக்குமெண்டாக பதிவு செய்ய கிளம்புகிறார்கள். காத்தூர் கிராமத்தில் மக்களை பலி கேட்கும் மங்கை என்கிற பெண்ணின் ஆவி மற்றும் முழு பௌர்ணமி அன்று ஆற்றில் குளிக்கும் ஏழு கன்னியர் இப்படியாக அந்த கிராமத்தில் நிகழும் இரண்டு மர்மமான கதை உண்மையா இல்லை கட்டுக்கதையா என ஆராயும் நோக்கத்துடன் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களாக மெல்வின், ரிஷி, அங்கிதா, ஜெனிபர் நண்பர்கள் குழு கிராமத்தை அடைகிறார்கள்.
கிராமத்தில் இவர்களுக்கு உதவ ஒரு வழிகாட்டி வர வேண்டி இருந்த சூழலில் அவர் எதிர்பாராத விதமாக பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக உதவ வருகிறார் அவர் மகள் காந்தா. வழக்கமான நண்பர்களின் ஜாலி வீடியோ பயணமாக துவங்குகிறது. ஊர் மக்கள் கொடுக்கும் அச்சமும், எச்சரிக்கையும் இவர்களை சற்றும் சலனப்படுத்தவில்லை. அத்தனை அச்சுறுத்தல்களையும் மீறி பயணிக்கும் குழு இரவில் பல அமானுஷ்ய அசைவுகளையும், மர்மமான காலடி சப்தம் தன்னை தொடர்வது போலவும் உணர்கிறார்கள். தொடர்ந்து ஆவிகளுடன் பேசும் ஒய்ஜா போர்டை வைத்து விளையாட அமானுஷ்ய ஆட்டம் துவங்குகிறது. இவர்கள் கேள்விப்பட்ட கதை உண்மையா இல்லையா முடிவு என்ன என்பது மீதி கதை.
திகில் படங்கள் நமக்குப் புதிதல்ல. ஆனால், ‘ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர்’ என்கிற வகையில் தமிழ் சினிமா இதுவரை ஒரு திரைப்படத்தைக் கூட எடுக்க முயன்றதில்லை. ஆனால் ஹாலிவுட் , ஹிந்தி சினிமாவில் கூட இந்த வகையில் ஹாரர் படங்கள் நிறைய வந்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் இதுவரை செய்யாத முயற்சி என்கிற ரீதியில் இந்த படம் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய ஒரு படம். அதற்கு இயக்குனருக்கு பாராட்டுகள்.
காடுகளில் இரவு காட்சிகள் எனில் பெரும்பாலும் பகல் நேரத்தில் எடுத்து அதை இரவு லைட்டிங்கிற்க்கு மாற்றுவார்கள். ஆனால் இந்த படத்தில் அப்படி இல்லாமல் உண்மையாகவே இருட்டில் படப்பிடிப்பு நடத்தி, முக்கியமாக அடர்ந்த காட்டுக்குள் நம்மையும் சேர்த்து அழைத்துச் செல்கிறார்கள். பகலில் சருகு, இலைகள் மற்றும் மரங்கள் இடையே பயணம், இரவில் நெருப்பு மூட்டப்பட்ட வெளிச்சம் மற்றும் டார்ச் லைட்டில் நகரும் கதை என படம் நம்மை விஷுவலிலேயே அச்சத்தை உருவாக்குகிறது. அதற்கு ஒளிப்பதிவாளர் ஜேசன் தனது முழு அர்ப்பணிப்பையும் கொடுத்திருக்கிறார்.
‘ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர்’ படங்களைப் பொறுத்தவரை இசையமைப்பாளர் பின்னணி இசை அமைக்க கூடாது. மேலும் பின்னணி ஒலிகளும் லைவாக இருக்க வேண்டும். இதனை மனதில் கொண்டு கெவின் ஃபிரடெரிக் ஒலி வடிவம் அமைப்பு படத்திற்கு இரட்டிப்பு பயத்தைக் கொடுத்திருக்கிறது. குறிப்பாக சரடுகளில் நடந்து வரும் காலடி சப்தம் படம் என்பதையும் மீறி நம்மை அரட்டுகிறது. ஒவ்வொரு ஒலியும் துல்லியமாக கொடுத்திருக்கிறார்கள். படத்தின் ஒளி அமைப்பு , லைட்டிங் மற்றும் கலரிங் இருட்டான திரையரங்கில் நிச்சயம் இன்னொரு விதமான அச்சத்தை கொடுக்கும்.
நகரும், குலுங்கும் வகையிலான படாமாக்கம் சில பார்வையாளர்களுக்கு தலைசுற்றல், வாந்தி உள்ளிட்ட உணர்வை உண்டாக்கலாம் என பொறுப்பு துறப்பு படத்தின் ஆரம்பத்திலேயே போடப்படுகிறது. காரில் செல்லும் பொழுது தலைசுற்றல் வாந்தி பிரச்சனைகள் கொண்டவர்கள் இந்தப் படத்தின் போது ஒரு சில இடங்களில் அதே போன்ற உணர்வை உணரலாம்.
மொத்தத்தில் மைனஸ் பிளஸ்களை கடந்து தமிழ் சினிமாவில் முதல் ‘ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர்’ படமாக நிச்சயம் திரையரங்கில் பார்க்க வேண்டிய படமாக மாறியிருக்கிறது இந்த ' மர்மர் ' படம்.
Rating: 3.25 / 5.0
Showcase your talent to millions!!
മലയാളം Movie Reviews






Comments