இளைஞர்கள் கூட இப்போ இபிஎஸ் பக்கமே… அதிரடி காட்டும் தமிழக முதல்வர்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளைத் தவிர பெண்கள், ஏழை-எளிய மக்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்களையும் கவர்ந்த முதலமைச்சராக வலம் வருகிறார். இதனால் இபிஎஸ்க்கு இளைஞர்களின் ஆதரவு எப்போதும் இருப்பதாகக் கணிக்கப்பட்டு உள்ளது. காரணம் அவர் கொரோனா காலத்தில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி உள்ளார்.
அந்த வகையில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் இலவசமாக படிக்கும் பொருட்டு 2GB டேட்டாவை தனியார் நிறுவனத்துடன் இணைந்து இலவசமாக வழங்கி வந்தார். அதோடு கொரோனா நேரத்தில் அரசு பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வி தொலைக்காட்சி மூலம் அனைத்துப் பாடங்களையும் அதிலேயே படித்துக் கொள்ள ஏற்பாடு செய்து இருந்தார். மேலும் கொரோனா நேரத்தில் பள்ளி மாணவர்களும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகினர். அதைத் தவிர்க்கும் பொருட்டு மிகவும் பாதுகாப்பான சூழலை தமிழக முதல்வர் ஏற்படுத்திக் கொடுத்து உள்ளார்.
அந்த வகையில் தற்போது 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் திட்டத்தை அறிவித்து உள்ளார். இதனால் கொரோனா பாதிப்புள்ள இந்த நேரத்தில் மாணவர்கள் மிகவும் பயனடைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி பள்ளி, கல்லூரி மாணவர்களைத் தவிர இளைஞர்களையும் தமிழக முதல்வர் எடப்பாடி கவர்ந்து இருக்கிறார். காரணம் கொரோனா நேரத்திலும் இந்திய அளவில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. அந்த வகையில் அதிக முதலீடுகள் மூலம் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு எளிதாக வேலைவாய்ப்புகளும் உருவாக்கிக் கொடுக்கப்பட்டது.
மேலும் வவிசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடனை தமிழக முதல்வர் தள்ளுபடி செய்து உள்ளார். அதேபோல ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்ட 6 பவுன் நகைக்கடனையும் தமிழக முதல்வர் தள்ளுபடி செய்துள்ளார். மேலும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மூலம் பெறப்பட்ட கடனையும் தமிழக முதல்வர் தள்ளுபடி செய்துள்ளார். அதோடு நிவர், புரவி போன்ற புயல் பாதிப்புகளின்போது தமிழக முதல்வர் இடுபொருள் நிவாரணத்தைக் கூட்டிக் கொடுத்தார். மேலும் இவலச மும்முனை மின்சாரத் திட்டத்தையும் தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார்.
இந்நிலையில் பெண்களுக்காகவும் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறார். அதில் முதன்மையாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கியது, திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு உதவும் வகையில் தாலிக்கு 8 கிராம் தங்கள் வழங்கும் திட்டம், அதோடு குழந்தைப் பெற்றுக் கொண்ட பெண்களுக்கு 16 பொருட்கள் அடங்கிய பரிசு பெட்டகத்தை வழங்குவது, மேலும் ரூ.18,000 உதவித் தொகை வழங்குவது, முதியோர் உதவித்தொகை என அனைத்து நலத்திட்டங்களின் மூலமும் பெண்களுக்கும் நல உதவிகளைச் செய்துள்ளார்.
அதோடு கொரோனா நேரத்தில் வேலையில்லாமல் தவித்து வந்த குடும்பத்திற்கு உதவும் வகையில் ரூ.1,000 உதவித்தொகை வழங்கியது, ரேஷன் பொருட்களை வழங்கியது, தொழில் துறையில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது என தமிழக முதல்வர் இளைஞர்கள், விவசாயிகள், முதியவர்கள், வேலைக்குச் செல்வோர் என அனைவருக்கும் உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.