பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து முடிக்குமாறு தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு!!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். கனமழை அதனால் ஏற்படும் உபரிநீர், மழைநீர், வடிகால் போன்ற பாதிப்புகளில் மக்கள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வடகிழக்கு பருவமழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு தமிழக முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார்.
இதற்காக கடலோரப் பகுதிகள், அணைக்கப்பட்டு பகுதிகள், மற்றும் ஏரி பாசன வசதியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்வர் பல்வேறு திட்ட அமைப்புப் பணியாளர்கள் கொண்ட குழுவையும் அமைத்து இருக்கிறார். அந்தக் குழுவில் காவலர்கள் மற்றும் 691 ஊர்காவல் படையினர், 4,699 தீயணைப்பு வீரர்கள், 9,859 பாதுகாக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
மேலும் கல்வி நிறுவனங்கள், 2,561 தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ஒத்திகையோடு பருவமழைக்கால பாதுகாப்பு பயிற்சிகளையும் தமிழக அரசு வழங்கி இருக்கிறது. அதோடு பேரிடர் பாதிப்புகளை தவிர்க்கவும், குறைக்கவும் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளாக 6,016 தடுப்பணைகள் கட்டப்பட்டு 11,482 கசிவுநீர் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் பாதிப்புகள் இல்லாமல் தடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
7,299 ஆழ்துளை மற்றும் திறந்த வெளிகிணறுகள் நீர் செறிவூட்டும் கிணறுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றப்பட்டு உள்ளன. மழைநீர் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் தாழ்வான பகுதிகளை நோக்கிச் செல்வதற்காக 4,154 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஆறுகள் மற்றும் பாசன கால்வாய்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. மேலும் 11,387 பாலங்கள் மற்றும் 1,09,808 சிறு பாலங்களில் இருந்த அடைப்புகள் தற்போது நீக்கப்பட்டு உள்ளன.
மேலும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது அவர்களைத் தங்க வைப்பதற்காக பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இத்தனை முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக சில உத்தரவுகளைப் பிறப்பித்து இருக்கிறார்.
அதில், மழை காலங்களில் கீழே விழும் மரங்களை அகற்ற தேவையான ஆட்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழை நீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மீட்புக் குழுக்கள் குறுகிய கால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைய ஏதுவாக தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வயிற்றுப்போக்கு மற்றும் தொற்றுநோய் ஏதும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான அளவில் Bleaching Powder, மருந்துகள் இருப்பில் இருக்க வேண்டும். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், போதுமான அளவு மருந்துகள், இருப்பிடம் போன்றவை தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மேலும் மருத்துவமனைகளில் உள்ள ஜெரேட்டர்களை உயரமான இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும். பேரிடர் காலங்களில் இரண்டு மாத காலத்திற்கு தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்கள், நியாய விலைக் கடைகளில் போதுமான அளவில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரிடர் காலங்களில் கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் வெளியில் செல்லும் போதும், பொது இடத்தில் தங்க வைக்கும் போதும் முகக்கவசம் கட்டாயமாக அணிந்து கொள்ள வேண்டும். தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும். கூட்டம் கூடுதலை தவிர்க்க வேண்டும். பொதுமக்களுக்கு பேரிடர் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கையேடுகள், குறும்படங்கள் மற்றும் ஒலி, ஒளி பதிவுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக முதல்வர் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.